தொடரும் சீரற்ற வானிலை காரணமாக இன்றும் (19) பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
மகாவலி நீர்த்தேக்கத்தின் பொல்கொல்ல பகுதியில் 04 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அதன் பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வினாடிக்கு 5,190 கன அடி நீர் கொள்ளளவு விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு திறந்து விடப்படுவதாகக் கூறப்படுகிறது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் பெய்து வரும் கனமழையால் ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்த இன்று 4 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அந்த அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை கலா ஓயாவின் 2 வான் கதவுகளும் தலா இரண்டு அடி வரை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, கலா ஓயாவில் இருந்து வினாடிக்கு 3,447 கன அடி நீர் கொள்ளளவு திறந்து விடப்படுவதாக நீர்ப்பாசன பொறியாளர் தெரிவித்தார்.
அதேபோல், இராஜாங்கனை நீர்த்தேக்கத்தில் ஆறு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
அதிலிருந்து கலா ஓயாவுக்கு வினாடிக்கு 4,990 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அங்கமுவ நீர்த்தேக்கத்திலும் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன, அதிலிருந்து 2,824 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
