இந்தோனேசியாவிலும் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மார்ச் மாதம் 28ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்தத் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படும் என அந்நாட்டின் தொடர்பாடல் மற்றும் டிஜிட்டல் விவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் இனிமேல் Facebook, YouTube, TikTok, Instagram, Threads மற்றும் X போன்ற சமூக ஊடகங்களில் கணக்குகளைப் பராமரிக்க முடியாது என அந்த அமைச்சு அறிவித்துள்ளது. சிறுவர்கள் சமூக ஊடகப் பயன்பாட்டிற்குப் பெரிதும் அடிமையாகி வருவதுடன், பல்வேறு மோசடி நடவடிக்கைகளுக்கு அவர்கள் ஆளாகின்றமை உள்ளிட்ட விடயங்களைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசிய தொடர்பாடல் மற்றும் டிஜிட்டல் விவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

அதேவேளை இந்தியாவின் கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட உள்ளதாக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார். கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா 2026-27 நிதியாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது பேசியவர், கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளார்.

By RifkaNF