ஈரானின் ஒரே செயல்பாட்டு அணுமின் நிலையமான புஷெர் அணுமின் நிலையத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களால் பெரும் கதிர்வீச்சு கசிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக ஈரான் அதிர்ச்சியூட்டும் எச்சரிக்கையை விடுத்துள்ளது.ஈரானின் புஷெர் அணுமின் நிலையத்திற்கு அருகே அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளன. அணுசக்தி நிலையத்திற்கு மிக அருகில் இத்தகைய இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பது சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.இந்தத் தாக்குதல் தொடர்பாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி, ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸிற்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.அந்த கடிதத்தில் அவர், இந்த தாக்குதலின் காரணமாக அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சு கசிவு ஏற்படும் நேரடி அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றும் அணுசக்தி நிலையங்கள் மீதான இத்தகைய தாக்குதல்கள் ஈரான் நாட்டை மட்டும் பாதிக்காது, ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கும் மனித மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாக மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தும் எனவும் இத்தகைய நடவடிக்கைகள் சர்வதேச பாதுகாப்பு விதிகளுக்கு முரணானது என்பதையும் அவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரானின் இந்த எச்சரிக்கை உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
