இலங்கையில் பதிவு செய்ய முடியாத, சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான ஐந்து அதிவேக மோட்டார் சைக்கிள்களை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த வாகனம் பழுதுபார்க்கும் நிலையத்தின் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அங்கு ஒருங்கிணைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களில் ஒன்று சுமார் 65 இலட்சம் ரூபா பெறுமதியானது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பிலியந்தலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமிந்த குலசிங்கவுக்கு கிடைத்த தகவலின் பேரில், சமூக பொலிஸ் பிரிவின் அதிகாரிகள் நேற்று (12) மாலை பிலியந்தலை கிளை வீதியில் உள்ள வாகனம் பழுதுபார்க்கும் நிலையம் ஒன்றை முற்றுகையிட்டு, இந்த அதிவேக மோட்டார் சைக்கிள்களுடன் அதன் உரிமையாளரைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட குறித்த உரிமையாளரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நால்வர் இந்த மோட்டார் சைக்கிள் பாகங்களை தன்னிடம் கொண்டு வந்து கொடுத்ததாகவும், தான் அவற்றை ஒருங்கிணைக்கும் பணியை மாத்திரமே செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
