ஈரான் போர் காரணமாக இந்த ஆண்டிற்கான உலகப் பொருளாதார வளர்ச்சி எதிர்வு கூறல்களை குறைக்க சர்வதேச நாணய நிதியம் (IMF) நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன், போர் தொடருமானால் ஏற்படக்கூடிய உலகப் பொருளாதாரச் சூழல் குறித்தும் அது எச்சரிக்கை விடுத்துள்ளது. நீண்ட காலத்திற்கு போர் நீடிப்பது எண்ணெய் விலையை உச்சத்திற்கு கொண்டு செல்வதுடன், உலகப் பொருளாதார மந்தநிலைக்கும் வழிவகுக்கும் என சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது. இதன் விளைவாக மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) வளர்ச்சி வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும், AI தொழில்நுட்பத் துறையில் மேற்கொள்ளப்படும் பாரிய முதலீடுகளால் அமெரிக்கப் பொருளாதாரம் ஒப்பீட்டளவில் சாதகமான மட்டத்தில் இருக்கும் என்றும், எரிசக்தி விலையேற்றம் மற்றும் விநியோகத் தடைகளால் சீனா மற்றும் ஐரோப்பாவின் பொருளாதார வளர்ச்சி மந்தமடையக்கூடும் என்றும் IMF அறிக்கை குறிப்பிட்டுள்ளது. ஈரான் போரினால் வளர்ந்து வரும் சந்தை நாடுகளே (Emerging markets) அதிக பாதிப்புக்கு உள்ளாகும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. அதேவேளை, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் மாற்று சந்தைகள் மற்றும் விநியோக ஆதாரங்களை நோக்கி நகரக்கூடும் என்றும் IMF குறிப்பிட்டுள்ளது. எரிபொருள் விநியோகத்தில் தங்கியிருக்கும் பொருளாதாரங்களே இதில் அதிக அழுத்தத்திற்கு உள்ளாகும் எனத் தெரிவித்துள்ள IMF, ஈரான் போரை அடிப்படையாகக் கொண்டு மூன்று நிலைகளிலான எதிர்வு கூறல்களை முன்வைத்துள்ளது. ச சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் பியர்-ஒலிவியர் முன்வைத்துள்ள இந்த எதிர்வு கூறல்களின்படி, போர் தீவிரமடையும் போது மிக மோசமான சூழலில் உலகப் பொருளாதார மந்தநிலை ஏற்படக்கூடும். அத்தகைய சூழலில், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் சராசரி விலை 2026 ஆம் ஆண்டில் 110 டொலர்களாகவும், 2027 ஆம் ஆண்டில் 125 டொலர்களாகவும் உயரக்கூடும். ஒருவேளை போர் குறுகிய காலத்தில் முடிவுக்கு வந்தால், இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 82 டொலர்கள் வரை குறையக்கூடும் என IMF கணித்துள்ளது. போர் நீண்ட காலத்திற்குத் தொடரும் பட்சத்தில், இந்த ஆண்டில் ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 100 டொலர் மட்டத்தில் நிலவும் என்றும், உலகப் பொருளாதார வளர்ச்சி 2025 இல் காணப்பட்ட 3.4% உடன் ஒப்பிடுகையில் 2.5% ஆக வீழ்ச்சியடையும் என்றும் IMF தெரிவித்துள்ளது. மோதல்கள் தீவிரமடைந்தால் உலகப் பொருளாதார வளர்ச்சி 2% ஆகக் குறையும். அத்துடன், மிகவும் பாதகமான சூழலில் உலகப் பணவீக்கம் 6% வரை உயரக்கூடும் என்றும், சாதாரண எதிர்பார்ப்புச் சூழலில் அது 4.4% மட்டத்தில் இருக்கும் என்றும் சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.
