வனவாஸல மற்றும் ஹூணுபிட்டிய ஆகிய நிலையங்களுக்கு இடையிலான ரயில் மார்க்கத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது. இந்த தடம் புரள்வு காரணமாக ரயிலின் பெட்டி ஒன்று ரயில் மார்க்கத்தில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 12 பயணிகள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள தனியார் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும், அவர்களில் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார். இன்று அதிகாலை 3:25 மணிக்கு பொல்கஹவெலையிலிருந்து புறப்பட்ட இந்த ரயிலானது, தெற்கு களுத்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஒரு ரயிலாகும் என தெரிவிக்கப்படுகிறது.

விபத்து நடந்த நேரத்தில் ரயிலில் பயணித்த பயணி ஒருவர் பெட்டிக்கு வெளியில் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன், அவர் கவிழ்ந்த ரயில் பெட்டிக்கும் ரயில் மார்க்கத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றுக்கும் இடையில் சிக்கியதால் காயமடைந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். விபத்து காரணமாக கீழ் ரயில் மார்க்கத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேல் ரயில் மார்க்கம் மற்றும் மூன்றாவது ரயில் மார்க்கம் ஆகியவற்றில் ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படுவதாகவும் சம்பவ இடத்தில் இருந்த ரயில்வே திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விபத்து நடந்த இடத்திற்கு தற்போது ரயில்வே திணைக்கள அதிகாரிகள் வருகை தந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

By RifkaNF