முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக விடுவிக்க வேண்டும் என இலங்கைக்கான முன்னாள் நோர்வே அமைதித் தூதர் எரிக் சொல்ஹெய்ம், அழைப்பு விடுத்துள்ளார்.

விளக்கமறியலில் இருக்கும் போது அவரது உடல்நிலை குறித்து கவலை தெரிவித்துள்ள அவர் விடுதலை செய்யப்படவேண்டும் என்று கோரியுள்ளார்.

இந்தநிலையில் ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக விடுவிக்கக் கோரும் இலங்கை, தெற்காசியா மற்றும் உலகெங்கிலும் உள்ள தலைவர்களுடன் தானும் இணைவதாக சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் போது, இலங்கையைக் காப்பாற்ற நின்ற தலைவர் என்று அவர் ரணில் விக்ரமசிங்கவை பாராட்டியுள்ளார்.

அவர் மீதான குற்றச்சாட்டுகளை தகுதியற்றது என்று சொல்ஹெய்ம் நிராகரித்தார்.

உண்மையாக இருந்தாலும், அவை ஐரோப்பாவின் எந்தவொரு குற்றவியல் அல்லது ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தைக்கும் சமமாகாது என்றும் கூறினார்.

இலங்கையின் ஊழல் எதிர்ப்பு பிரசாரத்திற்கு ஆதரவைத் தெரிவிக்கும் அதே வேளையில், ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளைத் தொடர்வதை விட “உண்மையான பிரச்சினைகளில் கவனம் செலுத்த” அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று எரிக் சொல்ஹெய்ம் வலியுறுத்தியுள்ளார்.

By RifkaNF