தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இன்னும் கருத்தியல் ரீதியில் தோற்கடிக்கப்படவில்லை எனவும், இதனாலேயே இந்த அமைப்புக்காக சர்வதேசத்தில் நினைவகங்கள் அமைக்கப்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இதுபற்றி மேலும் குறிப்பிட்ட அவர்:
பயங்கரவாதத்தை இல்லாதொழித்து நாட்டு மக்களுக்கு உயிர் பயமின்றி வாழ்வதற்குரிய சூழ்நிலையை ஏற்படுத்தினோம். பயங்கரவாதத்தை தோற்கடித்த எமது படையினர் தற்போது வேட்டையாடப்படுகின்றனர். புலிகள் அமைப்பு கட்டமைப்பு ரீதியாக தோற்கடிக்கப்பட்டிருப்பது உண்மைதான். ஆனாலும், புலிகளின் கருத்தியல் இன்னும் உயிரூட்டப்பட்டுக் கொண்டே வருகிறது. விடுதலைப் புலிகளுக்காக சர்வதேசத்தில் நினைவகம் அமைக்கப்படுகின்றது. படையினருக்கு இவ்வாறு நினைவகம் அமைத்தால் இனவாதமாக காட்ட முயற்சிக்கப்படுகிறது. முன்னாள் கடற்படை தளபதி ஒருவர் சிறை வைக்கப்பட்டுள்ளார். இப்படியான நிலை வருமென அந்த கடற்படை தளபதி நினைத்தும் பார்த்திருக்கமாட்டார். இவ்வாறான நிலைமையே இங்கு நிலவுகிறது. எமது நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த படையினரை நாம் பாதுகாக்க வேண்டும்.