தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொலிரூட் ஈஸ்ட் தோட்டத்தில் உள்ள 9 ஆம் இலக்க லயன் தொடர் குடியிருப்பில் நேற்றிரவு (23) ஏற்பட்ட தீ விபத்தால் ஒரு குடியிருப்பு பகுதியளவு சேதமடைந்துள்ளது. குறித்த குடியிருப்பில் உள்ள ஒரு அறையில் திடீரென பரவிய தீயால், அங்கிருந்த ஆடைகள் மற்றும் சில பொருட்கள் எரிந்து நாசமாகின.
தீ பரவியவுடன், அயலவர்கள் மற்றும் தோட்ட மக்கள் இணைந்து தீயைக் கட்டுப்படுத்தியதால், ஏனைய குடியிருப்புகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. சேதமடைந்த குடியிருப்பை புனரமைப்பதற்கு தோட்ட நிர்வாகம் பொறுப்பேற்றுள்ளது. தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பில் வசித்த ஐவர், தற்காலிகமாக உறவினர்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அவர்களுக்கு உலருணவு பொருட்களை வழங்குவதற்கு பொறுப்பு கிராம உத்தியோகத்தர் பிரபாகரன் நடவடிக்கை எடுத்துள்ளார். தீ விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
