கற்பிட்டியின் பங்களவத்தை மற்றும் சேதவாத்தை கடற்கரைப் பகுதிகளில் இந்த மாதம் 06 மற்றும் 07 ஆகிய திகதிகளில் இலங்கை கடற்படையினர் முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 907 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 06 ஆம் திகதி இரவு, வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் உள்ள ‘விஜய’ கடற்படைக் கப்பலின் ஆலங்குடா துணைப் பிரிவினரால் பங்களவத்தை கடற்கரைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், சந்தேகத்திற்கிடமான இரண்டு (02) மூட்டைகள் சோதனையிடப்பட்டன. இதன்போது, சுமார் 80 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மீட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 07 ஆம் திகதி மாலை சேதவாத்தை கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான 16 மூட்டைகள் கண்டறியப்பட்டன. அவற்றைச் சோதனையிட்ட கடற்படையினர், அவற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 827 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளைக் கைப்பற்றினர். இவ்வாறாக இரு தினங்களில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் மொத்தம் 907 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By RifkaNF